
வணக்கம் என் பெயர் பாலச்சந்தர். நான் 2002 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். என் வாழ்க்கை மிகுவும் எளிமையான ஒன்று. ஆனால் அதில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் எண்ணிலடங்காது. ஒரு சிறிய கிராமத்து இளைஞராக இருந்து எவ்வாறு டிசிகாப் பள்ளியில் ஒரு வலை உருவாக்குநராக நான் இணைந்தேன் என்பதை பற்றி தான் இந்த பதிவில் கூற உள்ளேன்.
ஆரம்ப பள்ளி வாழ்க்கை
கல்வியின் முக்கியத்துவத்தை நான் சிறு வயதில் உணரவில்லை. வீட்டில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு என் நண்பர் நடத்தும் தங்கும் விடுதிக்கு சென்று, நாள்முழுவதும் ஓய்வெடுத்துவிட்டு வந்துவிடுவேன். ஒரு நாள் என் தந்தை இதை கண்டுபிடித்து, என்னை செயின்ட் அலோசியஸ் மழலையர் மற்றும் ஆரம்ப பள்ளிக்கு மாற்றினார். அங்கு நான் நன்றாக படித்துக்கொண்டிருந்தேன். ஆனால் பள்ளி கட்டணம் அதிகரித்ததால், என் தந்தை என்னை சுவாமி விவேகானந்தா மழலையர் மற்றும் ஆரம்பப்பள்ளியில் சேர்த்தார்.
அங்கு தான் எனக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். என் கற்றல் ஆர்வமும் அங்கு தான் தொடங்கியது. நானும் என் நண்பர்களும் அதிக மதிப்பெண்கள் எடுக்க ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொள்வோம். அவை என் பள்ளி வாழ்க்கையின் மறக்க முடியாத நாட்களாக இருந்தது. இருப்பினும், மீண்டும் கட்டணம் உயர்ந்ததால், என் தந்தை என்னை ஒரு அரசுப் பள்ளிக்கு மாற்றினார். என் நண்பர்களைப் பிரிய நேர்ந்ததை எண்ணி நான் வருத்தப்பட்டேன். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, அவர்களில் பலர் ஏற்கனவே அதே பள்ளியில் சேர்ந்திருந்தனர்! இதனால் சற்று ஆறுதலாக இருந்தது. எப்போதும் என்னை வகுப்பறையின் முன் வரிசையில் அமருமாறு என் தாயார் கூறுவார். நான் நன்றாகப் படிக்க அது உதவும் என்று அவர் நம்பினார். அவர் சொன்னது சரிதான். நானும் நன்றாக படிக்கத் தொடங்கினேன். அதன்பிறகு காலம் விரைவாக ஓடத்தொடங்கியது.
டிப்ளோமா படிப்பும் வாழ்க்கைப்பாதையும்
நான் 10 ஆம் வகுப்பில் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். என்னை மேல்நிலை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர் எண்ணினர். ஆனால் நான் டிப்ளோமா படிக்க விரும்பினேன். முதலில் என் பெற்றோர் இதற்கு மறுத்தனர். அவர்களை சமாதானப்படுத்தி, என் எண்ணத்தை வெளிப்படுத்தி, எப்படியோ அவர்களை சம்மதிக்க வைத்தேன். இறுதியில் அவர்கள் என் முடிவை ஆதரித்தனர்.
இருப்பினும், டிப்ளமோ படிக்கும்போது, நான் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன் – டிப்ளமோ படிப்பதற்கு பதிலாக மேல்நிலைப் பள்ளியே படித்திருக்கலாம் என்ற எண்ணம் உருவாகியது. கல்லூரியின் இரண்டாம் ஆண்டின் போது கோவிட் தொற்றுநோய் தாக்கியதால், அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனால் நான் மூன்றாம் ஆண்டு கல்லூரி வாழ்கையை இழந்தேன்.
கல்லூரிக்குப் பிறகு, எனக்கு எந்த வேலை பொருந்தும் என்று தெரியாவிட்டாலும், வேலைக்கு செல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். நான் பல நேர்காணல்களில் கலந்து கொண்டேன். ஆனால் எங்கும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. என் வாழ்க்கை பாதை எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று எனக்கு அப்போது தெரியவில்லை.
பணி வாழ்க்கை
சில மாதங்களுக்குப் பிறகு, பிளாஸ்டெக் மோல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இயந்திர இயக்குபவராக வேலை கிடைத்தது. நான் அங்கு 3 மாதங்கள் வேலை செய்தேன். ஆனால் வேலைப் பாதுகாப்பு இல்லாததால் அங்கிருந்து வெளியேறினேன்.
பின்னர், நான் டெல்லியில் உள்ள யூனிக்மோல்ட் டெக்ஸ்ச்சரிங் நிறுவனத்தில் சேர்ந்தேன். இரண்டு மாதங்களில் டெக்ஸ்ச்சர் வேலையைக் கற்றுக்கொண்டேன். ஆனால் அந்த வேலையை எனக்கு பிடிக்கவில்லை. அங்கிருந்து வெளியேறி மீண்டும் சொந்த ஊருக்கே வந்துவிட்டேன்.
பிறகு, நான் பைஜூஸ் நிறுவனத்தின் பயிற்சி மையத்தில், சந்தைப்படுத்தல் குழுவில் பணியாற்றினேன். ஆனால் நிறுவனத்தின் இழப்புகள் காரணமாக, 3 மாதங்களுக்குப் பிறகு நான் வெளியேற வேண்டியிருந்தது. அடுத்த ஒரு வருடம், என்ன செய்வதென்று தெரியாமல் என் சொந்த ஊரிலேயே இருந்தேன்.
நண்பரின் சந்திப்பும் புதிய வாய்ப்பும்
ஒரு நாள் எதிர்பாராத விதமாக என் நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர் இன்னொருவரிடம் டிசிகாப் பள்ளி என்ற அமைப்பை பற்றி பேசிக்கொண்டிருந்தார். நானும் அவர் கூறுவதை கேட்டுகொண்டிருந்தேன். மென்பொருள் நிறுவனமான டிசிகாப், டிப்ளமோ அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளித்து வருவதாக அவர் கூறியதை கேட்டதும் எனக்கும் அங்கு சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
அங்கு அடுத்த பருவ மாணவர்களுக்கான நேர்காணல் நடைபெற போவதாக அவர் கூறினார். அவர் என்னை விண்ணப்பிக்க ஊக்குவித்தார் – அந்த தருணம் என் வாழ்கையில் எல்லாவற்றையும் மாற்றியது. நானும் நேர்காணலுக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்பித்த சில மாதங்கள் கழித்து, என்னை நேர்காணலுக்கு வருமாறு அழைப்பிதழ் வந்தது. நேர்காணலில் கலந்துகொள்வதற்காக சென்னையை நோக்கி புறப்பட்டேன்.

என்னுடைய முழு திறனையும் நேர்காணலில் வெளிப்படுத்தினேன். தொழில்நுட்பத்தை பற்றி எனக்கு எதுவும் தெரியாத போதும், அதனை கற்றுக்கொள்ளும் ஆர்வம் எனக்கு இருப்பதை அவர்களிடம் வெளிப்படுத்தினேன். இறுதியில் என்னை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். பல தேடலுக்கு பிறகு என் வாழ்க்கையின் பாதையை நான் கண்டுபிடித்துவிட்டது போல் உணர்ந்தேன்.
பள்ளியில் என் பயணம்
நான் டிசிகாப் பள்ளியில் சேர்ந்தபோது, வலை மேம்பாட்டு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எச்.டி.எம்.எல் (HTML), சி.எஸ்.எஸ் (CSS), பக்க அமைப்பு போன்ற சொற்கள் எனக்கு முற்றிலும் புதியவை. எனக்கு நிரலாக்கத்திலோ வடிவமைப்பிலோ எந்தப் பின்னணியும் இல்லை. ஆனால் என்னிடம் ஒன்று இருந்தது. கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வலுவான ஆசை.
ஆரம்பத்தில், நான் பல போராட்டங்களை எதிர்கொண்டேன். மிக அடிப்படையான எச்.டி.எம்.எல் (HTML) கட்டமைப்பை எழுதுவது கூட குழப்பமாக இருந்தது. சி.எஸ்.எஸ் (CSS) நிலைப்படுத்தல் என்னை விரக்தியடையச் செய்தது. பல நாட்கள் ஏதோ ஒரு புதிரில் சிக்கித் தவிப்பது போல் உணர்ந்தேன். என் திறன் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் நான் அதை விட்டுவிடவில்லை. ஒரு ஒரு படியாக முன்னேற தொடர்ந்து முயற்சி செய்தேன்.

சிரமப்படுவது கற்றலின் ஒரு பகுதி என்பதை இந்த ஆரம்ப நாட்களில் நான் கற்றுக்கொண்டேன். நான் சரிசெய்த ஒவ்வொரு பிழையும், ஒவ்வொரு சிறிய வெற்றியும் என் நம்பிக்கையை வளர்த்தது. கேள்விகள் கேட்டேன், அதிகம் பயிற்சி செய்தேன், பயிற்சி காணொளிகளை பார்த்தேன், சிறிய திட்டங்களை உருவாக்கினேன். மெல்ல மெல்ல, நிரலாக்க கருத்துகள் எனக்கு புரிய ஆரம்பித்தன.
நாட்கள் நகர்ந்தன
என் தொழில்நுட்பத் திறன்களுடன், என் தகவல்தொடர்பு மற்றும் ஆங்கிலம் பேசும் திறன்களையும் வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தேன். நான் கூச்ச சுபாவமுள்ளவனாகவும், பேசத் தயங்குபவனாகவும் இருந்தேன். ஆனால் கூட்டு கற்றல் சூழல் என் கூச்சத்தைப் போக்க உதவியது. விவாதங்களில் பங்கேற்கவும், என் எண்ணங்களை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளவும் ஆரம்பித்தேன்.

மாதங்கள் செல்லச் செல்ல, எச்.டி.எம்.எல் (HTML) மற்றும் சி.எஸ்.எஸ் (CSS) மொழியை பயன்படுத்தி பல செயல்திட்டங்களை உருவாக்கினேன். ஒரு வலைத்தளத்தை உருவாக்கும் போது பல கருத்துகளை நினைவில் கொள்ள வேண்டும். வலைதளம் பயனருக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். வடிவமைப்பு கொள்கைகளை நினைவில் கொள்ள வேண்டும். கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். இது எல்லாவற்றையும் நான் கற்க தொடங்கினேன். சிறந்த குறியீட்டு நடைமுறைகளை பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். ஒரு காலத்தில் என்னைப் பயமுறுத்தியது தற்போது நான் விரும்பும் ஒன்றாக மாறியது.
மேலும் கற்க விரும்புகிறேன்
8 மாதங்களுக்குப் பிறகு, நான் என் முன்இறுதி வலைதள மேம்பாட்டுப் பயிற்சியை தற்போது முடித்துள்ளேன் என்று கூறுவதில் பெருமை கொள்கிறேன். இந்த பயணம் எளிதானது அல்ல. ஆனால் நூறு சதவீதம் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. நான் தொழில்நுட்ப அறிவைப் பெற்றேன், என் தகவல்தொடர்பு மேம்பட்டது. மேலும் சுய ஒழுக்கமுள்ளவனாகவும் மாறினேன்.
இப்போது, நான் மேலும் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளேன். குறிப்பாக ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் ரியாக்ட் போன்ற கட்டமைப்புகளை கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரு நாள் முழு அடுக்கு உருவாக்குநராக வேண்டும் என்பதே என் கனவு. அதுவே என் கற்றல் ஆர்வத்தை மேலும் உயர்த்திக்கொண்டே இருக்கிறது.
டிசிகாப் பள்ளி எனக்கு பல தொழில்நுட்ப திறன்களை கற்று கொடுத்தது. ஆனால் அதற்கும் மேலாக பலவற்றை என்னுள் புகுத்தியது. அது எனக்கு தன்நம்பிக்கையையும், என் எதிர்காலத்தை நானே வடிவமைக்க முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுத்தது. இன்னும் பல்வேறு செயல்திட்டங்களில் பங்கு பெற விரும்புகிறேன். மேலும் என் திறனை வளர்த்துக் இந்த துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்துள்ளது. இந்த எட்டு மாதங்களில் நான் அடைந்த வளர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, தொழில்நுட்பம் குறித்து எதும் அறியாதவனாக தொடங்கி தற்போது ஒரு வலைத்தளத்தை உருவாக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளேன் என்று என்னும் போது எனக்கே பெருமையாக இருக்கிறது. என் மீது நம்பிக்கை கொண்டு, டிசிகாப் பள்ளியில் சேர எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.