
வணக்கம்! என் பெயர் லோகேஷ்வரா ரஞ்சித்குமார். தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். எனது முதல் வலைப்பதிவைப் பகிர்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதில் எனது ஆரம்பகால வாழ்க்கை, பள்ளி அனுபவங்கள், போராட்டங்கள், தனிப்பட்ட வளர்ச்சி இன்னும் பலவற்றைப் பற்றி பேசப் போகிறேன். இந்த வலைப்பதிவின் மூலம், எனது பயணத்தின் சில நகைச்சுவையான மற்றும் மறக்க முடியாத தருணங்களைப் பகிர்வது மட்டுமல்லாமல், என்னை வடிவமைத்த சவால்களைப் பற்றியும் பேச விரும்புகிறேன்.
இளவயது வாழ்க்கை
நான் செயின்ட் பால்ஸ் பள்ளியில் படித்தேன். உண்மையை சொல்லப்போனால், அது என் வாழ்வின் மறக்க முடியாத ஆண்டுகள். ஆரம்ப நாட்களில், நான் அமைதியான மாணவனாக இருந்தேன். ஆனால் ஆழ்மனதில், எனக்கு எப்போதுமே நகைச்சுவை உணர்வும், மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற குணமும் உண்டு. காலப்போக்கில், எனது உண்மையான குணம் வெளிப்படத் தொடங்கியது – நான் அதிகம் பேசும் மற்றும் அனைவரிடமும் நட்பாக பழகும் மாணவனாக மாறினேன்.
எனது வாயாடித் தனத்தின் காரணமாக, ஒருமுறை நான் வகுப்புத் தலைவனாக்கப்பட்டேன் (நான் பொறுப்பானவன் என்பதால் அல்ல, என்னுடைய பேச்சு திறனால் மட்டுமே!). இதன் காரணமாக ஆசிரியர்களிடம் அடிக்கடி தண்டனையும் வாங்கியிருக்கிறேன். பள்ளியில் நாம் உருவாக்கிய அற்புதமான நினைவுகளுக்கு ஈடாக எதுவும் இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன்.
மேல்நிலைக் கல்வியின் போது, நிலைமை சற்று மாறியது. எனது குறும்புத்தனமான நடத்தை மற்றும் மோசமான கல்வி செயல்திறன் காரணமாக ஆசிரியர் பெற்றோர் சந்தின்பின் போது என் தந்தை என்னை கடிந்து கொண்டார். இதனால் மீண்டும் அமைதியான மாணவனாக மாறினேன். நான் கணித பாடத்தில் மிகவும் சிரமப்பட்டேன். அது இறுதியில் என்னை பன்னிரெண்டாம் வகுப்பில் தோல்வியடையச் செய்தது. விரக்தியடைந்த போதும் நான் ஒருபோதும் என் நம்பிக்கையை கைவிடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து, பல பின்னடைவுகளைச் சந்தித்த பிறகு இறுதியாக தேர்ச்சி பெற்றேன். அந்த தருணம் வாழ்க்கையின் மிக முக்கியமான பாடங்களில் ஒன்றை எனக்குக் கற்றுக் கொடுத்தது – உடனடி வெற்றியை விட விடாமுயற்சி முக்கியமானது என்பது தான் அது.
பகுதி நேர வேலைகள்: புன்னகைக்குப் பின்னால் உள்ள போராட்டங்கள்
கல்லூரியில் சேருவதற்கு முன்பு, எனக்கும் என் குடும்பத்திற்கும் ஆதரவளிக்க பல பகுதி நேர வேலைகளைச் செய்தேன். சாய் மீரா இன்னோபார்ம், ஃபெர்ன்ஸ் என் பெட்டல்ஸ் (கேக் விநியோகம் செய்பவராக), ஃபிளிப்கார்ட் (விநியோக முகவராக), எம்ஜிஎம் ஹெல்த்கேர் மற்றும் குடும்ப வியாபாரத்திற்கு உதவ என் தந்தையின் கடையிலும் வேலை செய்தேன். நான் வேலை செய்த காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டேன்.
இருப்பினும் வேலை செய்யும் இடத்தில், எப்போதும் எனது நூறு சதவீத உழைப்பைக் கொடுத்தேன். மேலும் தொழில் உரிமையாளர்களால் பலமுறை பாராட்டப்பட்டேன். இருப்பினும், எனது மூத்த அதிகாரிகள் பெரும்பாலும் எனது முயற்சிகளை அங்கீகரிக்கவில்லை. கடினமாக உழைத்த போதிலும், பெரும்பாலான நேரங்களில் எனக்கு நியாயமான சம்பளம் கிடைக்கவில்லை. ஒரு விநியோக நபராக, நான் போக்குவரத்து நெரிசல், தாமதங்கள் மற்றும் வாடிக்கையாளர் அழுத்தத்தை எதிர்கொண்டேன். மேலும் பணிச்சுமை அதிகமாக இருந்தது.
என் தந்தையின் கடையில் வேலை செய்யும் போது, என் தவறு இல்லாதபோதும் ஒருமுறை நான் அனைவர் முன்னிலையிலும் திட்டப்பட்டேன் – அந்த தருணம் எனக்கு கடினமாக இருந்தது. இந்த கஷ்டங்கள் அனைத்தையும் மீறி, நான் முன்னேறி, எனது 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, கல்லூரியில் சேர முடிவு செய்தேன். நான் ஒருபோதும் வெற்றியைப் பற்றி கனவு காணவில்லை. அதற்காக உழைத்தேன்.
கல்லூரி வாழ்க்கை: என் கனவுகளுக்கு ஒரு படி அருகில்
நான் புரசைவாக்கத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்தேன். கல்லூரி வாழ்க்கை புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது. எனக்கு விளையாட்டுத்தனமான மற்றும் குறும்புத்தனமான நண்பர்கள் குழு கிடைத்தது. ஆனால் கல்வி என்று வரும்போது, நாங்கள் அனைவரும் தீவிரமாக இருந்து சிறப்பாகச் செயல்பட்டோம். இதனால் எந்த நிலுவையும் இல்லாமல் எனது டிப்ளமோவை முடிக்க முடிந்தது.
கல்லூரி இறுதி ஆண்டின் போது நான் ஒரு நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால் ஒரு சில காரணங்களால் நான் அந்த வேலையைத் தேர்ந்தெடுக்கவில்லை. இந்த நேரத்தில், எனது நண்பர் லோகேஷ், டிசிகாப் நிறுவனத்தில் நேர்காணலில் கலந்து கொள்ள போவதாக கூறினார். அப்போது எனக்கு அந்த நிறுவனத்தைப் பற்றி அதிகம் தெரியாது. இருந்தாலும் நண்பர் செல்வதால், அவருடன் சேர்ந்து நேர்காணலில் கலந்துக்கொள்ள முடிவு செய்தேன்.
நேர்காணல் அனுபவங்கள்
நானும் என் நண்பரும் எந்தவித முன்முயற்சியும் செய்யாமல் நேர்காணலில் கலந்துக்கொண்டோம். நேர்காணல் மூன்று சுற்றுகளாக நடந்தது. முதல் சுற்று முடிவுபெற்ற போது எங்கள் பெயர்கள் பட்டியலின் கீழே இருந்தன. அடுத்த சுற்றில் எங்கள் தரவரிசை சற்று உயர்ந்தது. இறுதி சுற்று முடிவு பெற்ற போது எங்கள் பெயர் முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்தன. ஆச்சரியப்படும் விதமாக, நாங்கள் இருவரும் டிசிகாப் பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்டோம்!

சில நேரங்களில் எதிர்பாராமல் நாம் எடுக்கும் முடிவுகள் நம் வாழ்வை மாற்றத்தக்கதாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது தான் அதை என் கண்களால் காண்கிறேன். பல பகுதி நேர பணிகளுக்கு பின்னர், ஒருவழியாக எனக்கு ஒரு முழு நேர பணி கிடைத்துவிட்டதாக எண்ணினேன். இங்காவது என் திறன் அங்கீகரிக்கப்படுமா?
டிசிகாப் பள்ளியில் எனது பயணம்: ஒரு புதிய ஆரம்பம்
தற்போது, நான் டிசிகாப் பள்ளியில் மென்பொருள் துறையில் பயிற்சி பெற்று வருகிறேன். இந்த வாய்ப்பைப் பற்றி நான் முதலில் கேள்விப்பட்டபோது, எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. உண்மையில், நேர்காணலுக்கு முன்பு, நானும் என் நண்பரும் சாதாரணமாக ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்று தான் முடிவு செய்தோம். டிசிகாப் பள்ளி என்பது டிசிகாப் நிறுவனத்தின் ஒரு முன்முயற்சியாகும். தொழில்நுட்ப துறையில் இணைய ஆர்வம் இருந்தும் அதற்காக விலையுயர்ந்த கல்லூரிக் கல்வியில் சேர வசதி இல்லாத மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
டிசிகாப் பள்ளியில் நான் கவனித்த மிக அற்புதமான விஷயங்களில் ஒன்று பணி கலாச்சாரம். அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். மேலும் செயல்திறனை விட கற்றலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவர்கள் எங்களுக்கு பலவற்றை பயிற்றுவித்தனர். தொழில்முறை மின்னஞ்சல் அனுப்புவது (Email etiquette), டோஸ்ட்மாஸ்டர்ஸ் அமர்வுகள், இந்த தளம் எனக்கு தன்னம்பிக்கையைப் பெறவும், ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்தவும், மேடை பயத்தைப் போக்கவும் உதவியது. பலகை விளையாட்டு மேம்பாடு (Board Game Development), விளையாட்டுகளை உருவாக்குவதன் பின்னணியில் உள்ள முறைகளையும் படைப்பாற்றலையும் அவர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

நான் கல்லூரியில் எச்.டி.எம்.எல் (HTML) மற்றும் சி.எஸ்.எஸ் (CSS) மொழியை கற்றிருந்தாலும், இன்னும் தேர்ச்சி பெற நிறைய இருக்கிறது என்பதை இங்கு உணர்ந்தேன். பிறகு ஜாவாஸ்கிரிப்ட் மொழியை கற்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அதை குறியீட்டில் செயல்படுத்த சிரமப்பட்டேன். இருந்தாலும் மேலும் முயற்சித்து அதனை செயல்படுத்த கடினமாக உழைத்தேன். அவ்வபோது எங்களை மதிப்பீடும் செய்வார்கள். இது எங்களின் திறனை அளவீடு செய்வதற்கு மட்டுமல்ல, தற்போது நாங்கள் எங்கு பலவீனமாக இருக்கிறோம் என்பதை கண்டறிந்து, அதில் எங்களை மேலும் வளர்ச்சியடைய செய்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது.
இதை தரவுத்தள மேலாண்மை மதிப்பீட்டின் போது நான் தெரிந்துகொண்டேன். தேர்விற்கான விடை தெரிந்தபோதும், நேரத்தை சரியாக நிர்வகிக்க முடியாததால், என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. நேர மேலாண்மையை பின்பற்ற வேண்டும் என்று இது எனக்கு கற்றுக்கொடுத்தது. அப்போதிருந்து, நான் தொடர்ந்து பயிற்சி செய்யத் தொடங்கினேன். இப்போது நான் எனது நண்பர்கள் திவாகர் பூபாலன், பாலாஜி சுப்ரமணி மற்றும் ஷேவாக் ஆகியோருடன் ஒரு குழு திட்டத்தில் இருக்கிறேன்.
எதிர்கால திட்டங்கள்
எனக்கு சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் அதிகம். பலகை விளையாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாடு பற்றி கற்றப் போது எனக்கு மேலும் ஆர்வம் அதிகரித்தது. அதை நான் மிகவும் ரசித்தேன். அதனால் எனது நண்பர் விக்னேஷுடன் சேர்ந்து “சொல்லியல்” என்ற தமிழ் அடிப்படையிலான பலகை விளையாட்டை உருவாக்கினேன். இந்த விளையாட்டை மேலும் மேம்படுத்துவதும், வலை மேம்பாட்டில் சிறந்து விளங்குவதுமே எனது எதிர்காலத் லட்சியமாகும்.

பன்னிரெண்டாம் வகுப்பில் தோல்வியுற்றதிலிருந்து, பல பகுதி நேர வேலைகளைச் செய்து, இறுதியாக ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் மென்பொருள் துறையில் பயிற்சி பெற்று வருவது வரை நான் நீண்ட தூரம் வந்துவிட்டேன். இந்த பயணம் இப்போது தான் தொடங்கியது போல் உள்ளது, ஆனால் அதற்குள் ஒரு வருடத்தை நான் நிறைவு செய்ய போகிறேன். இப்போது, ஒரு மென்பொருள் உருவாக்குநராக வேண்டும் என்ற இலக்கில் நான் கவனம் செலுத்துகிறேன். தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் கற்கவும், கடினமாக உழைக்கவும், வளரவும் நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.
வெற்றி என்பது ஒரே இரவில் வராது. அது பொறுமை, விடாமுயற்சி மற்றும் பேரார்வம் ஆகியவற்றால் சம்பாதிக்கப்படுகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த எனது நண்பர்கள், பள்ளி பயிற்சியாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.