
தோல்வி அடையும் போது நாம் அனைவரும் மனம் வருந்துவது உண்டு. ஆனால், நன்றாக ஆராய்ந்து பார்த்தால் அந்த தோல்வி நமக்கு ஏதோ சொல்ல வருவதை நாம் அறியலாம். அவ்வாறு, என் தோல்விகளில் இருந்து நான் பலவற்றை கற்றுள்ளேன். அதை பற்றிய ஒரு சிறிய பதிவு தான் இது.
என் பெயர் திவாகர் பூபாலன். நான் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவன். தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில், மின்னணு தொடர்பு பொறியியல் டிப்ளமோ படிப்பை முடித்து, தற்போது டிசிகாப் பள்ளியில் முழு அடுக்கு வலை உருவாக்குநராக பயிற்சி பெற்று வருகிறேன். நான் எவ்வாறு டிசிகாப் பள்ளியில் இணைந்தேன் என்பதை பற்றி உங்களிடம் பகிர விரும்புகிறேன்.
பள்ளி வாழ்க்கை நினைவுகள்:
நான் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்தேன். பிறகு 6 ஆம் வகுப்பு முதல் 10 அம் வகுப்பு வரை நங்கநல்லூரில் உள்ள நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன்.
பள்ளி நாட்களில் நான் மிகவும் அமைதியாக இருப்பேன். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் என் மீது மதிப்பு இருந்தது. நான்கு வருடங்கள் எங்கள் பள்ளியில் நான் வகுப்பு தலைவராக செயல்பட்டேன். வகுப்பறையில் நேர்மறையான எண்ணங்களை விதைப்பது முக்கியம் என்று நான் உணர்ந்தேன். ஆகையால், நான் வகுப்பு தலைவராக செயல்பட்ட போது என்னால் இயன்ற வரை வகுப்பறையில் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க பல வழிகளை மேற்கொண்டேன்.
பள்ளி வாழ்க்கை என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. நண்பர்களுடன் பயணம் மேற்கொள்வது, பிற பள்ளிக்கு சென்று அங்கு நடைபெறும் போட்டிகள், கண்காட்சிகளில் பங்கேற்பது, மேடையில் ஏறி சான்றிதழ் வாங்குவது என வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. ஆனால், இதன் பிறகு தான் என் வாழ்க்கை மாறப்போகிறது என்று எனக்கு அப்போது தெரியவில்லை.
கல்லூரி வாழ்க்கை நினைவுகள்:
தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணு தொடர்பு பொறியியல் டிப்ளமோ படிப்பை தொடங்கினேன். முதல் ஆண்டு நான் எனது முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தினேன். இதனால் என்னால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடிந்தது. அங்கு இருந்த ஆசிரியர்களும் எங்களுக்கு சிறப்பாக வகுப்பு நடத்தினார்கள். என் கணித ஆசிரியர் கணிதப் பிரச்சினைகளைத் தீர்க்க எனக்கு நிறைய உதவி செய்தார். இது அவர் மீது மரியாதையை எனக்கு உருவாக்கியது.
ஆனால் எல்லாம் இரண்டாம் ஆண்டில் தலைகீழாய் மாறியது. என் நண்பர்களுடன் சேர்ந்து நான் வகுப்புகளைத் தவிர்க்க ஆரம்பித்தேன். இதனால் எனது வருகை சதவீதம் குறைய ஆரம்பித்தது. படிப்பிலும் சரியாக கவனம் செலுத்த இயலமால் போனது. எனது வருகை மிகவும் குறையவே, கல்லூரியில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். அப்போது அதன் விளைவை பற்றி நான் பெரிதும் கவலைக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது எண்ணி பார்க்கும் போது அவ்வாறு செய்யாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
கல்லூரியில் இருந்து நிக்கபட்டதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், எங்களது கரிம பல்பொருள் அங்காடியில் வேலை செய்தேன். பொருட்கள் பெறப்பட்ட குறிப்புகளை (GRNs) கையாள்வது மற்றும் வரி கணக்கீடுகளை செய்வது எப்படி போன்றவற்றை நான் இங்கு பணிபுரியும் போது கற்றுக்கொண்டேன். நானும் என் நண்பரும் இணைந்து இந்த கடையை வெற்றிகரமாக நடத்தி வந்தோம்.
இவ்வாறே இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. வேலை பிடித்திருந்தாலும், கல்வியை பாதியில் நிறுத்தியது எனக்கு வருத்தமாக இருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் அதே கல்லூரியில் இணைந்து படிக்க ஆரம்பித்தேன். முதல் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றேன். இந்த முடிவு தான் என்னை டிசிகாப் பள்ளியில் இணைய வழிவகுத்தது.
டிசிகாப் பள்ளி: என் பயணத்தின் முதல் அத்தியாயம்
கல்லூரி கடைசி ஆண்டின் போது அடுத்து வாழ்வில் என்ன செய்வது என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. ஏதாவது புதிய வேலைக்கு செல்ல வேண்டும் என்று எனக்கு ஆவல் உருவாகியது. அப்போது தான் எனக்கு தொழில்நுட்ப துறையின் மீது ஆர்வம் அதிகரித்தது. எப்படியாவது மென்பொருள் துறையில் பணிபுரிய வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் வெறும் டிப்ளோமா படிப்பை மற்றும் வைத்து எவ்வாறு தொழில்நுட்ப துறைக்கு செல்வது? என்னால் மென்பொருள் துறையில் வேலைக்கு சேர முடியுமா என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இதற்கு என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது தான் என் நண்பர் மூலம் டிசிகாப் பள்ளியை பற்றி தெரிந்துகொண்டேன்.
இதற்கு முன்னர், அந்த நிறுவனத்தை பற்றி நான் கேள்விபட்டது இல்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆராய்ந்த போது தான், டிப்ளோமா அல்லது பன்னிரெண்டாம் வகுப்பை முடித்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளித்து வேலையும் அளிக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். ஆகையால், 2022 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்தேன். ஆனால் அந்த முறை தேர்ந்தெடுத்தவர்கள் பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை. என் நம்பிக்கையை கை விடாமல் 2023 ஆம் ஆண்டு மீண்டும் விண்ணப்பித்தேன். ஆனால், இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
நான் தோல்வி அடையவில்லை, தோல்வி அடைவதற்கான 10000 வழிகளை கண்டுபிடித்துள்ளேன் என்று தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் கூறியுள்ளார். நானோ இரண்டு முறை மட்டுமே தோல்வியுற்றுள்ளேன். எனவே, மூன்றாவது முறை ஏன் முயற்சிக்கக்கூடாது என்று என் மனம் என்னை தூண்டியது. மீண்டும் 2024 ஆம் ஆண்டு பள்ளியில் சேர விண்ணப்பித்தேன். இந்த முறை என் பெயரும் நேர்காணலில் கலந்துகொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
பெரும் மகிழ்ச்சியுடன் நேர்காணலுக்கு சென்றேன். முதலில் தகுதிச் சுற்றை நடத்தினார்கள். அதில் நான் தோல்வி அடைவேன் என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அதில் நான் தேர்ச்சி பெற்றேன். இரண்டாவதாக தொழில்நுட்ப சுற்று நடைபெற்றது. இந்த முறையும் தேர்ச்சி பெற்றேன். ஆனால் இறுதியில் மனிதவள சுற்றில் என்னை தேர்ந்தெடுக்கவில்லை. ஒரு சிறிய ஏமாற்றம் இருந்தாலும், எல்லாம் ஒரு அனுபவம் தான் என்ற எண்ணத்துடன் விடைபெற்றேன்.

என் மென்பொருள் கனவு இதனுடன் முடிந்துவிட்டது என்று நான் வருந்திக்கொண்டிருந்த போது, என்னுடைய திறனை வெளிப்படுத்த எனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. டிசிகாப் பள்ளி நடத்திய இணையவழி நேர்காணலில் பங்கேற்றேன். எல்லா சுற்றுகளிலும் என் முழு ஆற்றலை வெளிப்படுத்தினேன். அதற்கு பயனாக, எல்லா கட்டங்களையும் வெற்றிகரமாக கடந்து, இறுதியாக டிசிகாப் பள்ளியில் தேர்வானேன்!
ஒரு புதிய உலகின் தொடக்கம்

புதிய அனுபவங்களை எதிர்பார்த்து, நான் பள்ளி பயணத்தை தொடங்கினேன். அந்நாளில் எனக்கு வழிகாட்டிய நபர்கள், குறுகிய காலத்திலேயே எனக்கு நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள்.
இங்கு வருவதற்கு முன்னர் நான் குறியீடு மொழிகளை பயன்படுத்தியது கிடையாது. எனினும் எங்களுக்கு கற்றுக்கொடுத்த வழிகாட்டிகள் எல்லாவற்றையும் எளிமையாகவும், தெளிவாகவும் விளக்கியதால், எனக்கு அது நன்றாக புரிய ஆரம்பித்தது. தொழில்நுட்பத் துறையில், என் அறிவை வளர்த்துக்கொள்வதற்கு நான் ஆவலாக இருந்தேன். முதலில் எச்.டி.எம்.எல் (HTML) மற்றும் சி.எஸ்.எஸ் (CSS) பயன்படுத்தி ஒரு வலைப்பக்கத்தை எப்படி வடிவமைப்பது என்பதை கற்றேன். இது எனக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது.
மெல்ல மெல்ல நான் ஜாவாஸ்கிரிப்ட் மொழியை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அதன் பிறகு தரவுத்தள மேலாண்மை கருத்துகளை கற்க ஆரம்பித்தேன். எனக்கு இதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதே ஆர்வத்துடன் தரவுத்தள மேலாண்மை மதிப்பீடு தேர்விலும் பங்கேற்றேன். அது எனக்கு பயனுள்ளதாக இருந்தது. பயிற்சியாளர்கள் எனக்கு அளித்த ஊக்கத்துடன் நான் தொடர்ந்து முன்னேற ஆரம்பித்தேன்.
தற்போதய நிலைமை

தற்போது, நான் ஜாவாஸ்கிரிப்ட் பயிற்சியில் முழுமையாக கவனம் செலுத்தி, உணவுக்குறிப்புகள் மற்றும் மளிகைப் பொருட்கள் தொடர்பான செயலிகளை உருவாக்கி வருகிறேன். இது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.
வெறும் தொழில்நுட்பத்தில் மற்றும் கவனம் செலுத்தாமல் எங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் பல்வேறு முயற்சிகளை பள்ளியில் மேற்கொள்கின்றனர், அதில் ஒன்று தான் டோஸ்ட்மாஸ்டர். எங்களின் பேச்சு பயம், மேடை பயம், தகவல் தொடர்பில் எங்களுக்கு இருக்கும் சவால்களை எதிர்கொள்ள இந்த டோஸ்ட்மாஸ்டர் அமர்வுகள் பெரிதும் உதவுகிறது. ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும், தொடர்ந்து பங்கேற்றதின் மூலம் என் நம்பிக்கையும் பேச்சுத்திறனும் மேம்பட்டது.
சிறு வயது முதலே, எனக்கு பயணங்கள் மேற்கொள்வது என்றால் மிகவும் பிடிக்கும். பயணங்கள் மேற்கொள்வது எனது வாழ்க்கையில் புதியவற்றை முயற்சிக்க கற்றுக்கொடுத்தது. புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பையும் இது உருவாக்கியது. எனக்கு புதிய கலாச்சாரம், புதிய மொழிகள், புதிய இடங்களை ஆராய்வது மிகவும் பிடிக்கும். இது தான் என்னை மின்னுனு பாதையில் இருந்து மென்பொருள் பாதைக்கு மாற்றி என்னை டிசிகாப் பள்ளிக்கு கொண்டு சென்றது என்று நினைக்கிறேன்.
இந்த பள்ளி பயணம் எனக்கு பல புதிய அனுபவங்களையும், அரிய பாடங்களையும் கற்றுத் தந்தது. நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வாய்ப்புகள் கைகூடும் என்பதை நான் உணர்ந்தேன். இது ஒரு முடிவு அல்ல – என் பயணத்தின் அடுத்த அத்தியாயத்திற்கு ஒரு துவக்கம் தான். மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம். நன்றி!